மகளின் துஷ்பிரயோக வழக்கை முடிக்க தாயை ஹோட்டல் அறைக்கு அழைத்த பொலிஸ் அதிகாரிக்கு ஷாக் கொடுத்த பெண்
கேகாலை மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கை விரைவாக முடித்து வைக்க உதவுவதாகக் கூறி, பாலியல் லஞ்சம் பெறும் நோக்குடன் ஒரு பெண்ணை வரக்காப்பொல பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வரக்காப்பொல பொலிஸில் கடமையாற்றும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மீது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாலியல் துஷ்பிரயோகம்
சம்பந்தப்பட்ட பெண் கடந்த 05 ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கேகாலை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
முறைப்பாட்டாளரான பெண்ணின் மகளுக்கு 2021 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு தற்போது கேகாலை மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதுடன், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் அந்த வழக்கில் சாட்சியாளராகவும் செயற்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து முடித்து வைப்பதற்கான ஆவணங்களைத் தயாரிப்பதற்காக எனக்கூறி சம்பந்தப்பட்ட பெண்ணை தனியாக வந்து தன்னை சந்திக்குமாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர், பல சந்தர்ப்பங்களில் அவருக்கு அழைப்பு விடுத்து, தன்னை தனியாக வந்து சந்திக்குமாறு கடுமையாக வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தந்திரமாகச் செயற்பட்ட அந்தப் பெண், தனது உறவினர் ஒருவருடன் வேன் ஒன்றில் வரக்காப்பொல நகருக்கு வந்து, தான் பஸ்ஸில் தனியாக வந்ததாகக் கூறி சந்தேகநபரான அதிகாரியைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்திருந்த உப பொலிஸ் பரிசோதகர், அவரை மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கோரியுள்ளார். பெண் முதலில் அதை மறுத்தாலும், தொடர்ச்சியான கோரிக்கையின் பேரில் அதற்கு சம்மதித்துள்ளார்.
பின்னர் அவர் அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெண்ணின் உறவினர் வேன் ஒன்றில் ரகசியமாக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில், பெண்ணின் உறவினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து உப பொலிஸ் பரிசோதகரை திட்டி, அவரை அங்கிருந்து விரட்டியடித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் உப பொலிஸ் பரிசோதகர் தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். பின்னர் பெண் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.