இலங்கை வரலாற்றில் முதல் தடவை; பொலிஸ்மா அதிபர் இல்லா பொலிஸ் திணைக்களம்!
பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து – அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 11 நாட்கள் ஆகின்ற நிலையில் இன்னும் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை. கடந்த 26ஆம் திகதி சந்தன விக்கிரமரத்ன ஓய்வுபெற்றுவிட்டார்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவை
இந்நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இப்படி பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாமல் பொலிஸ் திணைக்களம் இயங்குகின்றது.
அவரது பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பிரியாவிடை நிகழ்வுகூட அவருக்கு நடத்தப்படவில்லை. அடுத்த பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு இன்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸ்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியபோதும் எதுவித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகின்றது.
பொலிஸ்மா அதிபருக்குத் தகுதியான எவரும் சிபாரிசு செய்யப்படாமையே இதற்குக் காரணம் என்றும் அறியமுடிகின்றது.
48 மணித்தியாலங்களுக்குள் நியமனம்
அதேவேளை வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபர் ஒருவரைப் பெயரிடுவார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் என்று சபையில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கேள்விகளை எழுப்பியபோது, அதற்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.