பிள்ளையானின் கட்சி காரியாலயத்தில் திடீர் சோதனை; சிஐடி முற்றுகை
மட்டக்களப்பில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி மற்றும் விசேட அதிரடிப்படையினர் இன்று (30) முற்றுகையிட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.
3 மாதம் தடுப்புக்காவலில் பிள்ளையான்
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிள்ளையான் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு, முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள பிள்ளையான் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட அதிரடிப்படை மற்றும் சிஐடியினர் சம்பவதினமான இன்று பகல் 11.00 மணிக்கு முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கிருந்தவர்களை அழைத்து அவர்களின் கையடக்க தொலைபேசிகளை வாங்கி கொண்டு ஒரு இடத்தில் இருக்க வைத்தனர்.
மேலும் காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியேறவோ உட் செல்லவோ விடாது கட்டிட நிலத்தை உடைத்து பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.