தலைமறைவாகியிருந்த பிள்ளையானின் நெருங்கிய நபர் மட்டக்களப்பில் கைது
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் சகா அஜித் என்பவர் மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தலைமறைவு
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவங்கள் தொடர்பிலேயே அஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பிள்ளையான் என்ற சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
இதனையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் நண்பரான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் குவைத் நாட்டுக்குத் தப்பி ஓடித் தலைமறைவாகி இருந்தார்.
இந்தநிலையில், அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.