இறந்தவருக்கு பிரேத பரிசோதனை நடத்த வந்த பொலிஸார்; காத்திருந்த அதிர்ச்சி
மதுரங்குளி பிரதேசத்தில் காணி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த காவல்காரரது உடலை பிரேத பரிசோதனை செய்ய போகும் போது உயிரிழந்ததாக கருதியவருக்கு உயிர் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 17ஆம் திகதி காணியின் உரிமையாளர் மதுரங்குளி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அந்த நபர் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு
புத்தளம் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றத் தலைவர் ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரங்குளி பிரதேசத்தில் உள்ளுராட்சி மன்றத் தலைவருக்குச் சொந்தமான காணியில் நீண்டகாலமாக காவலாளி ஒருவர் பணியாற்றி வந்த நிலையில், அவர் காவலர் இல்லத்தில் இறந்துள்ளார் எனக் கடந்த 17ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இறந்த உடலில் ஈக்கள் படர்ந்திருந்ததாகவும், இந்த மரணத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்றும், இந்த மரணம் மர்ம மரணம் இல்லை என்பதால், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனையும், விசாரணையும் நடத்தலாம் என அதிகாரி, பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் , இறந்ததாகக் கூறப்பட்ட நபர் உயிருடன் இருப்பதை அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த காவலாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும், தெரிவிக்கப்படுகிறது.
அதோடு உணவு இன்மையால் அவர் மயங்கியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.