பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; வெளியான பல்வேறு தகவல்கள்
களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் நேற்று (29) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,
பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், வாகனங்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் சந்தேகம்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “நிலங்க” என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறை - பின்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்காக பழிவாங்கும் நோக்கத்தில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து”வின் சகாக்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேவேளை அண்மை காலங்களாக இலங்கையில் துப்பாக்கி சூட்டு சம்பங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.