பாணந்துறை துப்பாக்கிச் சூடு; மேலதிக தகவலை வெளியிட்ட பொலிஸார்
பாணந்துறையில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிரணை, மேற்கு மாலமுல்ல பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,
சலிந்து மல்ஷிக தலைமையில் இடம்பெற்றிருக்கலாம்
ஹிரணை மேற்கு மாலமுல்ல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் இருந்த இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞர் ஆவார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் இருவரும் ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “குடு சலிந்து” எனப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் தலைமையில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.