இலங்கையை மிஞ்சிய பாகிஸ்தான்; விண்ணை முட்டும் விலைகளால் மக்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தானில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
வல்லுனர்கள் கருத்து
அதேவேளை கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்த நிலையில் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அதன் காரணமாக கடந்த மே, 2022 உடன் மே, 2023 ஒப்பிடும்போது நுகர்வோர் பொருட்கள் மீதான விலை ஊரக பகுதியில் 52.4 சதவீதம் என்ற அளவிலும், நகர பகுதிகளில் 48.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
எனினும் நடப்பு ஜூனில் இது குறையலாம் என எதிர்பார்ப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் இந்த பணவீக்க சதவீதமானது இலங்கையுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
கடந்த மே மாதத்தில் இலங்கையில் இந்த எண்ணிக்கை 25.2 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது பகிஸ்தானில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில் சர்வதேச செலாவணி நிதியத்துக்குத் தேவையான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.