கிழக்கு கடற்பரப்பில் மையம் கொண்ட தித்வா புயல் ; கடலில் தத்தளிக்கும் மீன்பிடிப் படகுகள்
நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக நுழைய முடியாமல், அண்மையிலுள்ள கடற்பரப்பில் தங்கியுள்ளன என்று கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிக கடல் அலை, பலத்த காற்று மற்றும் கடுமையான அலை உயர்வுகள் காரணமாக, படகுகளை உள்ளூர் துறைமுகங்களுக்கு கொண்டு வருவது தற்போது அபாயகரமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கை
மீனவர்கள் மற்றும் படகுகளில் உள்ளவர்கள் உடனடியான ஆபத்தில் இல்லை என்றாலும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடற்படையுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோசமான கடல்சூழ்நிலை தொடரும் நிலையில், மீனவர்கள் தேவையற்றபடி கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமெனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.