ஆர்ப்பாட்டக்காரர்களால் எங்கள் கவனம் பாதிக்கப்படவில்லை; ஆஸி வீரர்கள்
காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட்போட்டியின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றுமாறு தாங்கள் கோரவில்லை என அவுஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
துடுப்பாட்டவீரர்களின் கவனத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுவதை அவுஸ்திரேலிய வீரர்கள் நிராகரித்துள்ளனர்.
காலி மைதானத்தை பார்த்தவாறு காணப்படும் காலிகோட்டையில் கிரிக்கெட் போட்டிகளின் போது பெருமளவு ரசிகர்கள் காணப்படுவது வழமை ஆகும் . ஆடுகளத்தில் இடம்பெறும் விளையாட்டை தெளிவாக பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் அந்த இடத்தை விரும்பி தெரிவு செய்வார்கள்.
இந்நிலையில் இரண்டு டெஸ்ட்போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட்டின் போது நாடு எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை அரசாங்கத்தி;ற்கு எதிரான பதாகைகளை ஏந்திய ரசிகர்கள் காலி கோட்டையில் காணப்பட்டனர்.
டெஸ்ட்போட்டியின் இரண்டாவது நாளன்று ஆர்பட்டாக்காரர்கள் பலவந்தமாக அகற்றப்பட்டதுடன் போட்டியின் இறுதி நாளன்று அரண்பகுதிக்கு எவரையும் செல்ல அனுமதிக்காத அதேவேளை அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதோடு துடுப்பாட்டவீரர்களின் கவனத்தை குழப்பக்கூடிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தினார்கள் என இராணுவபேச்சாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் பதாகைகள் துடுப்பாட்டவீரர்களின் கவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தின என தெரிவிக்கப்படுவதை தான் நிராகரிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் காலிகோட்டையின் மேல் பதாகைகளுடன் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் காரணமாக தங்கள் கவனம் பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுவதை அவுஸ்திரேலிய வீரர்கள் நிராகரித்துள்ளதாக த ஏஜ் மற்றும் சிட்னி மோர்னிங் ஹெரால்ட் ஆகியன தெரிவித்தன.