முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (09) கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலதிக விசாரணை
இதன்போது, அங்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அரசியல் நோக்கங்களுக்காக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஒரு மில்லியன் ரூபாய் செலவில் 600 ஜி.ஐ. குழாய்களை வாங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக்கூறி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.