ஓமிக்ரோன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வு!
ஓமைக்ரான் அலை தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு நமக்கு சாதகமானதாகவே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்ரிக்கா இதுவரை கொரோனாவின் நான்கு அலைகளைச் சந்தித்துள்ளது.
முதல் அலை - ஆல்ஃபா இரண்டாம் அலை - பீட்டா மூன்றாம் அலை - டெல்ட்டா நான்காம் அலை - ஓமிக்ரோன் இதில் நான்கு அலைகளில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளில் நேர்ந்த கொரோனா அனுமதிகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வில் பின்வரும் முடிவுகள் கிடைத்தன.
- சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளும் சரி. வைத்தியசாலையில் அனுமதி செய்யப்பட்ட நோயாளிகளும் சரி. நான்கு அலைகளில் ஓமிக்ரோன் அலையில் தான் குறைவு. அதிலும் சேர்க்கை தேவைப்பட்ட நோயாளிகளை டெல்ட்டாவுடன் ஒப்பிட்டால் 30% குறைவு
- நோயாளிகளின் சராசரி வயது - ஐம்பதுகளில் இருந்து நாற்பதற்குள் வந்திருக்கிறது. நான்காம் அலையில் சராசரி வயது 36 ஆகப் பதிவாகியுள்ளது.
- இணை நோய்களுடன் அனுமதி ஆனவர்களின் சதவிகிதம் ஏனைய அலைகளுடன் ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்துள்ளது.
- தீவிர சுவாசப்பாதை அறிகுறிகளுடன் அனுமதி ஆனவர்களின் எண்ணிக்கையும் சதவிகிதமும் மும்மடங்கு குறைந்துள்ளது
- ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சதவிகிதம் நான்கு மடங்கு குறைந்துள்ளது.
- செய்ற்கை சுவாசக்கருவி தேவைப்பட்டவர்கள் சதவிகிதம் எட்டு மடங்கு குறைந்துள்ளது.
- சிகிச்சையில் அனுமதி ஆகியிருந்த சராசரி நாட்கள் எட்டு என்ற அளவில் இருந்து மூன்றாகக் குறைந்துள்ளது
- மரண விகிதங்கள் மூன்றாம் அலையைக் காட்டிலும் பத்து மடங்கு குறைந்துள்ளது.
இவற்றை உற்று நோக்கும் போது நமக்கான ஓமிக்ரோன் அலையும் இதைப்போன்றோ அல்லது இதை விட மட்டுப்பட்டதாய் இருந்து விட வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

நமது மக்கள் தொகையில் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி பெரும்பான்மை மக்களை காக்கும் என்று நம்புகிறோம்.
எனினும் தொற்று வீரியமாகப் பரவும் தன்மையுடன் இருப்பதால் இது குறைவான நாட்களில் மிக அதிகமான மக்களை அடைந்தால் வைத்தியசாலையில் அனுமதிகள் கூடிவிடும் அபாயம் உள்ளது.
தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்ந்தால் வைத்தியசாலை அனுமதிகளும் உயரும் அப்போது ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கையும் உயரும்.
மரண எண்ணிக்கையும் உயரும். எனவே நமது தற்போதைய குறிக்கோள் அனைத்தும் இந்த தொற்றானது குறைவான நாட்களில் மிக அதிகமான மக்களை சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதே.
அதற்காகவே இந்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளன. எனினும் இவை அனைத்தும் தற்காலிகமானவையே இந்த அலை மிகக் குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்து விடைபெறும் விரைவில் நாம் இதில் இருந்து மீள இருக்கிறோம் என்பதைப் பதிவு செய்து முடிக்கிறேன்.
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்
முகக்கவசம்
தனிமனித இடைவெளி
தேவையற்றப் பயணங்கள் கூட்டங்களை தவிர்த்தல்
இவற்றை தற்போது கடைபிடிப்போம் என சிவகங்கை வைத்தியர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் தெரிவித்துள்ளார்.