மூன்று பிள்ளைகளின் தாய்க்கு எமனான அதிகாரி ; கவனக்குறைவால் பறிபேன உயிர்
பிலியந்தலை, மடபாத படகெத்தர பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்று மோதியதில் ஆடைத் தொழிற்சாலையின் பெண் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, தம்பே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
சாரதியின் கவனக்குறைவு
விபத்து தொடர்பாக காரை செலுத்திய பட்டய கணக்காளர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் இறந்த பெண், வேலை முடிந்து படகெத்தர பகுதியில் வீதியின் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக வீதியை கடக்கும் போது, மடபாத திசையில் இருந்து புவக்கஸ் சந்தி திசை நோக்கிச் சென்ற சொகுசு கார் அவர் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலத்த காயமடைந்த பெண்ணை சந்தேகநபரான சாரதியே பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்தார்.
சந்தேகநபரின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற வகையில் வாகனம் செலுத்தியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.