இறைவனிடம் இருந்து கிடைக்கும் பிரசாதத்தை இனி இப்படி வீணடிக்காதீர்கள்
இறைவனிடம் நமக்கு கிடைக்கும் இந்த பிரசாதங்களை அதன் மகிமை தெரியாமல் பலர் வீணடிக்கிறார்கள். இன்னும் சிலர் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என கோவிலிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறார்கள். பிரசாதங்களை எப்படி வாங்க வேண்டும், அவற்றை வீட்டிற்கு எடுத்து வரலாமா? அப்படி கொண்டு வரும் பொருட்களை என்ன செய்ய வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
கோவில் பிரசாதம்
கோவிலில் அல்லது வீட்டில் சுவாமிக்கு படைத்த உணவுப் பொருளை நாம் பிரசாதம் என்கிறோம். சாதாரண சாதம் இறைவனுக்கு படைத்த பிறகு புனிதமான பிரசாதம் ஆகிறது. ஆனால் பிரசாதம் என்றால் இறைவனுக்காக விசேஷமாக தயாரிக்கப்படும் உணவு என பலர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
பிரசாதம் என்ற சொல்லுக்கு தூய்மை, மகிழ்ச்சி, பேரின்பம், அமைதி என அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. வழிபாட்டின் மூலம் நம்முடைய மனமானது நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி போன்றவற்றை அடைவதே உண்மையான பிரசாதமாகும்.
தினசரி பக்தி சிரத்தையுடனும், இறை சிந்தனை, மன தூய்மையுடன் பூஜை செய்யும் போது இறைவனின் திருமுகத்தை காணும் போது மனதில் ஏற்படும் அமைதியே உண்மையான பிரசாதம் என வேதங்கள் சொல்கின்றன.
பிரசாதம் வழங்கப்படுவது ஏன்?
நாம் இறைவனுக்கு படைக்கும் போது அதை நைவேத்தியம் என்கிறோம். அதுவே இறைவனுக்கு படைக்கப்பட்ட பிறகு அதனை பிரசாதம் என்கிறோம். பிரசாதம் ஒவ்வொரு கோவிலிலுக்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கப்பட்டு பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். இந்த பிரசாதத்தை வாங்க பல கோவில்களில் கூட்டம் அலைமோதும்.
பிரசாதம் வாங்கும் முறை
சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும், பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படும். இந்த பிரசாதங்களை சிலர் கைகளில் வாங்கி அப்படியே வாயால் கடித்து சாப்பிடுவார்கள். அல்லது சிதறி விட்டபடியும் சிந்தியும் சாப்பிடுவார்கள்.
இது மிகவும் பாவமாகும். விலங்குகள் தான் வாயால் கடித்து சாப்பிடும். இறைவனை நாம் இரண்டு கைகளால் வணங்கியதற்காக வழங்கப்படும் பிரசாதத்தை வலது கையால் வாங்கி இடது கைக்கு மாற்றி வலது கையால் எடுத்து பணிவுடனும், நன்றியுடனும் எடுத்து சாப்பிட வேண்டும்.
பிரசாதத்தை அதற்கான மரியாதையுடன் சாப்பிடாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காக பிறப்பார்கள் என புராணங்கள் சொல்கின்றன.
தீர்த்தம் வாங்கும் போது இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை வாங்கி பருக வேண்டும். அந்த கையை அப்படியே தலையில் வைத்து தடவிக் கொள்ளக் கூடாது.
பிறகு ஜடாரி வைக்கும் போது நம்முடைய தலையில் இருக்கும் எச்சில் இறைவனின் திருவடிகளுக்கு இணையான ஜடாரியின் புனித தன்மை கெடும். இது இறைவனை அவமதிப்பதாகும்.
பிரசாதம் வழங்க காரணம்
நம்முடைய உள்ளங்கையில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால் தான் காலையில் எழுந்ததும் உள்ளங்கையை முதலில் பார்க்க வேண்டும் என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
இதனால் பிரசாதத்தை வாங்கும் போது பணிவுடன் உள்ளங்கையில் வாங்கி பருக வேண்டும். பிரசாதம் என்பது வெறும் உணவுப் பொருள் அல்ல. இறைவனுக்கும் நமக்கும் இடையேயான பந்தத்தின் அடையாளம் ஆகும்.
இறைவனிடம் உள்ள அமைதி, இன்பத்தை நாமும் பெற வேண்டும், உணர வேண்டும் என்பதற்காகவே கோவில்களில் பிரசாதம் வழங்கப்படுகிறது. இறைவனின் அருள் நமக்கு நிறைந்து இறைவனின் குணத்தை நாமும் பெற வேண்டும் என்பதே பிரசாதம் வழங்கப்படுவதன் தாத்பரியம் ஆகும்.
பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரலாமா ?
கோவில்களில் கொடுக்கும் குங்குமம், திருநீறு, மஞ்சள் போன்றவையும் பிரசாதம் தான். அவற்றை வாங்கி நெற்றியில் வைத்துக் கொள்வதால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஆனால் இப்படி வழங்கப்படும் பிரசாதங்களை பலர் அங்கே வைத்து விட்டும், சுவர்களில் தடவி விட்டும், பிறரின் கால் படும்படி சிந்தி விட்டும் வருகின்றனர் இது மிகப் பெரிய பாவமாகும்.
சிவன் கோவில்களில் இருந்து திருநீறு எடுத்து வந்தால் சிவன் சொத்தை நாம் எடுத்து வருவதற்கு சமம் என பலர் தவறாக நினைத்து இவ்வாறு செய்கிறார்கள்.
கோவில்களில் கொடுக்கப்படும் பூக்களை மட்டும் தான் பூஜை அறையில் வைக்கக் கூடாது. திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றை நாம் வீட்டின் பூஜை அறையில் வைக்கலாம். தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.
அர்ச்சனைக்கு பயன்படுத்திய தேங்காயை சமையலுக்கு பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்த உணவினை மீண்டும் இறைவனுக்கு பிரசாதமாக படைக்கக் கூடாது.