ராஜபக்ஷக்களை சிறையில் தள்ள அயராது பாடுபடும் அநுர அரசாங்கம்
ராஜபக்ஷக்களையும் அவர்களின் நெருங்கிய சகாக்களையும் சிறையில் தள்ள அநுர அரசாங்கம் அயராது பாடுபடுவதாக முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்னர் சமல் ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படலாம் எனச் செய்திகள் வெளியாகியிருந்தன.
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது திஸ்ஸமஹாராமவில் உள்ள தனது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன எனத் தவறான தகவலை சமல் ராஜபக்ஷ அளித்துள்ளார்.
அதற்காக அரசிடம் இருந்து ஒரு கோடியே 50 இலட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே சமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
கண்டபடி விசாரணைக்கு அழைத்து பொய்யான வழக்குகளைத் தாக்கல் செய்து இந்த அரசு எம்மைச் சிறையில் தள்ள படாதபாடு படுகின்றது. நாம் ஊழல், மோசடிகளைச் செய்யவில்லை.
அநீதிகளை இழைக்கவில்லை. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் எம்மை அர்ப்பணித்துப் பணியாற்றினோம். வெளிநாடுகளின் சதி முயற்சியாலும், அன்றைய எதிரணிகளின் கூட்டுச் சூழ்ச்சியாலும் ஆட்சியில் இருந்து நாம் விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த அரசு எம்மைச் சிறையில் தள்ள படாதபாடு படுகின்றது. எம்மைச் சிறையில் அடைத்தாலும் நாம் மீண்டு வருவோம் என சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.