வடகடல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
யாழ்ப்பாணம் – குருநகர் வடகடல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடகடல் நிறுவனத்தில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் குறித்த நிர்வாகத்தினரால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.
இதன்போது தமது நிறுவனத்தில் தற்போதுள்ள நிர்வாகம் பாரபட்சமானதும் வினைத்திறனற்றதுமாக இருப்பதால் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தமக்கான மாதாந்த ஊதியங்கள் குறித்த திகதிகளில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதன்படி ஊழியர்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அதேநேரம் குறித்த நிர்வாகத்தில் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் ஊதியங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.