இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு; மின்துண்டிப்பு தொடருமா?
பராமரிப்பு பணிகள் காரணமாக கெலனிதிஸ்ஸ Sojitz தனியார் மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனால் தேசிய மின் கட்டமைப்புக்கு சுமார் 160 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டில் தற்போது போதுமான மின்சார நெருக்கடி காரணமாக குறித்த மின் நிலையத்தை மூட இடமளிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
இது தொடர்பாக ஆராய்வுச் செய்வதற்காக ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குழு, இன்று குறித்த மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்று ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் போதுமானதாக உள்ளதால், நாளை வரை மின்சாரத்தை துண்டிக்கக்கூடாது என பரிந்துரைத்துள்ளது.
இதனையடுத்து நாளைய தினத்தின் பின்னர் எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.