வட மாகாணத்தில் நீர் கட்டணத்திற்கான ரசீது தொடர்பில் வெளியான தகவல்
வட மாகாணத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பாவனையாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த நீர் கட்டணத்திற்கான ரசீது இம்மாதம் (01.11.2023) முதல் வழங்கப்படமாட்டாது எனவும் அதற்கு பதிலாக குறுந்தகவல் (SMS) மற்றும் மின்னஞ்சல் (e.Bill) ஊடாகவே மாதாந்த நீர்க் கட்டண விபரங்கள் பாவனையாளர்களுக்கு அனுப்பப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சுற்றுச் சூழல் நன்மை, செலவுகளைக் குறைத்தல், தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தல் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பாவனையாளர்களுக்கு தொலைபேசி மூலம் கட்டணங்களைச் செலுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
முகவரி பதிவு
மேலும் நீர்ப் பாவனையாளர்கள் தங்களின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிகளைச் சரியாக பதிவு செய்துகொள்ளாதவர்கள் நீர்மானி வாசிப்பாளர்கள் சமூகம் தருகின்ற போது அவர்களுடன் தொடர்பு பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 1939 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.