பல்கலைக்கழகங்களில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார்.
இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றாகும்.

வர்த்தமானி அறிவித்தல்
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரினால் 2025 டிசம்பர் 3 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் திருத்தம் மூலம் சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் (தரம் 1) ஆகியோரிடையிலிருந்து துறைத் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்கு துறைச் சபையை இயலச் செய்வித்தல், துறைத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் துறைத் தலைவர் ஒருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கு பேரவையை இயலச் செய்வித்தல் மற்றும் துறையொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலம் தொடர்பில் மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.
அத்துடன், இதன்மூலம் கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரை நியமிக்கும் போது பேரவையினால் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறையைக் குறித்துரைத்தல், கற்கைப் பகுதியொன்றின் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் கற்கைப் பகுதியின் தலைவரொருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்குப் பேரவையை இயலச் செய்வித்தல் மற்றும் கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட மட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.