யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கு ; மருமகன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வெளியிட்ட தகவல்
யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளரை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பில் பெண் சட்டத்தரணி சர்மினி ஆஜராகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பில் சிங்கள சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியுள்ளார்.

நேற்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, மருமகன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சர்மினி, தனது வாடிக்கையாளர் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.
இதனால் அவரை குற்றவாளியாக முன்கூட்டியே சித்தரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய உடல் சாவகச்சேரி நீதிமன்ற அதிகாரப் பகுதிக்குள் உள்ள மறுவன்புலவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தாலும், வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
எனினும், முக்கியமான மரண விசாரணை அறிக்கை இதுவரை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சந்தேகநபர்களான மகளும் மருமகனும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.