புதிய பிசிஆர் பரிசோதனை கூடம்: ஹேமந்தவின் தகவலால் வெடித்த சர்ச்சை!
இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய பிசிஆர் பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்காக தற்போதும் பழைய முறையிலேயே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கான கொள்ளளவு தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் அதனை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டுமாயின் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய பிசிஆர் பரிசோதனை கூடம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் 3 மணித்தியாலங்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் எனவும், இது நாட்டுக்கு வருகைதருவோருக்கு செலவுகளை குறைக்கவும், சிரமங்களை கட்டுப்படுத்தவும் உதவும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
எனினும், இந்த புதிய பிசிஆர் பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.