இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல; இந்தியா அறிவிப்பால் மகிழ்ச்சி
2015ஆம் ஆண்டு 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் தொடர்பிலான சட்டத்தின் கீழுள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு விலக்களித்துள்ளது.
இலங்கை தமிழர்களிடையே மகிழ்ச்சி
எனவே இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகளாக காணப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய மத்திய அரசின் இந்த முடிவு, மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.