வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்!
பொகவந்தலாவ பகுதியில் என்.சி போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் குறித்த சந்தேக நபர் நேற்று (09-12-2024) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருள் சிறிய பொதிகளில் பொதியிடப்பட்டு தோட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு பொதி 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் என்ற அடிப்படையில் விற்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொகவந்தலாவ பிரிட்வேல் தோட்டத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் மிகவும் சூட்சபமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ½ கிலோகிராம் என்.சி போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.