தமிழர் பகுதியில் கடற்படையினரின் மோசமான செயல் ; முறைப்பாட்டை ஏற்க மறுக்கும் பொலிஸார்
கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும், கிளிநொச்சி – கண்டாவளை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி - கண்டாவளை பேப்பாறைப்பிட்டிக்கு கடற்றொழிலுக்குச் சென்ற குறித்த நபர் கடந்த 21 ஆம் திகதி கடற்படையைச் சேர்ந்த சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் செயற்பாடு
இதுகுறித்து தங்களுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்துக்கு சென்ற தருமபுரம் பொலிஸார் குறித்த நபரை மீட்டு தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டைத் தருமபுரம் பொலிஸார், ஏற்க மறுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த நபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.