நாடாளுமன்றத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டம்
இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரி விழா பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (09) நாளுமன்றத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரரின் அனுசரணையுடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
நவராத்திரி விழா நிகழ்வு இந்து மதக் குருமார் பூஜை நிகழ்வுகளுடன் பக்திபூர்வமான முறையில் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பமானது. இங்கு மங்கல வாத்திய இசை நிகழ்வு மற்றும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய,
இந்தப் பூஜை விழாவை நடத்துவதன் மூலம் முழு நாட்டிற்கும் ஆசீர்வாதம் கிடைப்பதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளை சிறப்பாகச் செயற்படுத்தத் தேவையான பலமும், சக்தியும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இங்கு உரையாற்றுகையில், மக்களை அவர்களின் தீய எண்ணங்களிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான பலம் இந்த உயர்ந்த தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பெறப்படுகிறது என்று கூறினார்.
இந்த தெய்வங்களின் நற்பண்புகளையும் மக்கள் உள்வாங்க வேண்டும் என்றும், தெய்வங்களின் ஆசீர்வாதங்களால் சிறந்த மனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் இந்து மதகுருமார், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கஜயந்த கருணாதிலக, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.