நாளை நல்லூர் கந்தனின் பெருந்திருவிழா; கோலாகலமாக எடுத்துவரப்பட்ட கொடிச்சீலை
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந் நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (28) மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
கொடிசீலை வழங்கும் செங்குந்தர் பரம்பரை
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
அதன்படி கல்வியங்காட்டில் அமைந்துள்ள கொடிசீலை வழங்கும் செங்குந்தர் பரம்பரையை சேர்ந்தவரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று மங்கள வாத்திய சகிதம் கல்வியங்காடு வேல்மடம் முருகன் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.
அதனை தொடந்து, வேல்மடம் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தில் பருத்தித்துறை வீதி ஊடக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றனர்.
நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் நல்லூரானை தரிசிக்க வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது.




