யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் தென்னிலங்கையரால் சலசலப்பு !
யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் , பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய வளாகத்தினுள் தனது வாகனத்தை அடாத்தாக நிறுத்திய சம்பவம் தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் காரணமாக ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதி
அதோடு சிவப்பு வெள்ளை வேலிகளுக்குள் எவ்வித வாகனங்களும் அனுமதிக்காதவாறு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று மதியம் பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் தடைகளை தாண்டி வாகனத்தில் சென்றுள்ளார்.
அத்துடன் சிவப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்ட தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய முன்றலில் பக்தர்கள் பிரதட்டை அடிக்கக்கும் மணல்மேல் தனது காரை நிறுத்தியுள்ளார்.
ஆலய சூழலில் கடமையில் இருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையினுடைய பணியாளர்கள் காரினை அகற்ற முற்பட்டபோதும் அங்கு கடமையில் இருந்த பொலீசார் அதனை அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.
அதோடு தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த பொலிஸார் மாநகரசபை பணியாளர்களையும் மீறி தென்னிலங்கையரின் காரினை நிறுத்த அனுமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்தில் பாதணியுடன் நடமாட்டம்
குறித்த நபர் ஆலய வளாகத்தில் பாதணியுடன் நடமாடியதாக நேரில் கண்ட பக்தர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ,குறித்த வாகனத்தை ஆலய வளாகத்தில் நிறுத்த அனுமதித்த பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவ்விடத்தில் வாகனத்தைவிட்எதற்காக அனுமதித்திர்கள் என வினாவியபோது”அவர் IG இன் சகோதரர் என்றும், அவரை எப்படி நாம் மறிப்பது” என அங்கு கடமையில் நின்ற பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்த பொலிஸார் சென்று அவரை அழைத்துவந்த நிலையில் உடனடியாக அவர் தமது வாகனத்தை அப்புறப்படுத்தினார்.
இந்நிலையில் நல்லூரானில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் அடிக்கக்கூடிய மணல்மேல் காரை நிறுத்தியமையை ஏற்கமுடியாது என ஆலயச் சூழலில் நின்ற பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.