திருகோணமலையில் பல கோடி ரூபாய்களுக்கு நடந்த சம்பவம் ; சமூக ஊடகத்தால் அரங்கேறிய செயல்
வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை வெளியிட்டு பலகோடி ரூபா பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரொருவர் குச்சவெளி பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணை
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இவர், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து, தற்போதைய நாட்களில் கொழும்பில் வசித்து வருகின்றமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் உயர்ந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுமென சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிட்டு, இளைஞர்கள், பொதுமக்களிடமிருந்து பல இலட்சம் ரூபா நிதியை பெற்றுக்கொண்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில் சந்தேகநபரை நம்பி பணம் வழங்கியும் வேலைவாய்ப்பு வழங்கப்படாமை மற்றும் பணம் மீள வழங்கப்படாமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதுடன், அவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதாகக் கூறப்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும், அரச அங்கீகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து மட்டுமே சேவைகளைப் பெற வேண்டுமென்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்