கடலில் தத்தளித்த முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்று கரை திரும்பாத இரண்டு மீனவர்கள், கடலில் தத்தளித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (02) காலை பத்து மணியளவில், கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு மீனவர்களும், ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையே கரை திரும்பியிருக்க வேண்டும்.

இருப்பினும், நீண்ட நேரமாகியும் மீனவர்களும் அவர்களது படகும் கரை திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த உறவினர்களும் சக மீனவர்களும் இணைந்து, நான்கு படகுகளில் கடலுக்குச் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். எனினும், முதற்கட்டத் தேடுதலில் அவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை (04) காலை மீண்டும் மீனவர்கள் பல படகுகளில் சென்று தீவிரத் தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர். அப்போது, இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.