முல்லைத்தீவு மீனவர் மாயம்; படகு மீட்பு
முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமற்போன நிலையில், மீனவரின் படகு மீட்கப்பட்டுள்ளதுடன் மீனவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று (19) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் கடற்தொழிலுக்கு சென்றவேளை மீனவப் படகொன்று நடுக்கடலில் தனியாக யாருமற்ற நிலையில் மிதந்து வந்துள்ளது.
சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் நபர்கள்
இந்நிலையில், படகில் குறித்த நபரின் சறம் காணப்பட்டுள்ளது. அதனையடுத்து தொழிலுக்குச் சென்ற மீனவரின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த மீனவரைத் தேடுவதற்காக 8 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. கடலுக்கு சென்று காணாமல்போன நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
தற்போது கடந்த சில நாட்களாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் நபர்கள் சட்ட ரீதியாக தொழில் செய்யும் மீனவர்களை அச்சுறுத்திய சம்பவத்தையடுத்து, மீனவர் காணாமல்போயுள்ளமை தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.