முல்லைத்தீவில் அபாயகரமான பொருட்களை வைத்திருந்த கணவன் - மனைவி அதிரடி கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைப் பகுதியில் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருந்த கணவன் - மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய இரணைப்பாலைப் பகுதியில் வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணவன் - மனைவி இருவரும் போரின்போது கைவிடப்பட்ட வெடிகுண்டுகளை உடைத்து வீட்டில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வெட்டி எடுக்கப்பட்ட வெடிகுண்டுகளும், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட குடும்பப் பெண் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவேளை அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட குடும்பத் தலைவனைப் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றின் அனுமதியைப் பொலிஸார் பெற்றுள்ளனர்.