கிளிநொச்சிக்கு பெருமை தேடிகொடுத்த மாணவர்களை நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி
கிளிநொச்சிக்கு வரலாற்றுப் பெருமை தேடித்தந்த மாணவர்களை நேரில் சந்தித்து சிறீதரன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளர்.
வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன், கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் ஆனந்த் கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி கமலநாதன் மதுமினி ஆகியோரை , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று (01) கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அடையாளம்
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
"இது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தைப் பதித்துள்ளது. கல்வி ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், இங்கிருந்து ஒரு மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்திருப்பது எமக்குக் கிடைத்த ஒரு வரலாற்று வெற்றியாகும்" என்று குறிப்பிட்டார்.
பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அவர் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேவேளை வடமாகாண ஆளுநரும் இன்று காலை பாடசாலைக்கு விஜயம் செய்ததுடன் , சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாரட்டாட்டுக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.