மறைந்த சிங்கள நடிகை மாலினி பொன்சேக்காவுக்கு அவமானங்கள் மட்டுமே ; குமுறும் எம்.பி
இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேக்காவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை. அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மோசடிக்காரர் அல்ல
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தைத் திருடிய ஒருவர் என்று நாடாளுமன்றத்தில் பெயரிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதில் மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகா மிகவும் கவலையடைந்தார்.
முறையாகவே அவர் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணத்தைப் பெற்றார் என்பதற்கான ஆதரங்கள் அவரிடம் இருந்தன. நிதி உதவிக்கான கோரிக்கை கடிதம், விண்ணப்பக் கடிதம், விண்ணப்பப் படிவம், நிதி ஒப்புதல், விமான டிக்கெட், மருத்துவ பரிந்துரைகள் என்பவை அதன் ஒரு பகுதியாகும்.
இலங்கையில் சிங்கள சினிமாவின் சிறந்த நடிகையை ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பட்டியலிட்டு, அவரை அவமதிக்க வேண்டாம் என நான் நாடாளுமன்றத்தில் கூறினேன். இந்த ஆவணங்கள் அதற்கு சான்றாக இருக்கும்.
மாலினியின் உடலும் சாம்பலாக மாறிவிட்டது. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், 2022 ஆம் ஆண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், அதன் விளைவாக அவருக்கு கடுமையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் முழு நாடும் அறிந்திருக்கிறது.
ஒரு குடிமகனாக, மாலினி தனது நோய்க்கு சிகிச்சை பெற இலங்கையின் ஜனாதிபதியிடம் முறையான கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆவணங்கள் ஜனாதிபதி அதற்கு பதிலளித்து ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கியதை உறுதிப்படுத்துகின்றன. மாலினிக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை.
அவரே கூறியது போல், அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றார். இந்த ஆவணங்கள், மாலினி 'இந்த நாட்டில் மில்லியன் கணக்கான மக்களின் அன்பை வென்ற நட்சத்திரம், ஜனாதிபதி நிதியிலிருந்து தேசிய சொத்தையும் பணத்தையும் சட்டவிரோதமாக எடுத்துக் கொண்ட ஒரு மோசடிக்காரர் அல்ல' என்பதை அவரை நேசித்த அனைவருக்கும் நிரூபிக்க உதவும்.
அவர் பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் இருந்தார், ஆனால் அவர் 225 கள்வர்களில் ஒருவர் அல்ல. மாலினி பொன்சேகாவுக்கு மரணம் ஏமாற்றத்தைப் போல வேதனையாக இருந்திருக்காது என்றுள்ளது.