தொழிற்சங்கங்களின் நடவடிக்கையால் அவதிக்குள்ளான மலையக நோயாளர்கள்!
அரசாங்கத்தின் நியாயமற்ற வரி விதிப்புக்கு எதிராக மத்திய மாகாணம் உட்பட பல மாகாணங்களில் தொழிற்சங்கள் உட்பட அரச வைத்தியர்கள் மருத்துவப் பணிப்பகிஷ்கரிப்பை இன்றைய தினம் (15-03-2023) மேற்கொண்டன.
இதன் காரணமாக மலையக பிரதேசங்களிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டன.
தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினால் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் பணி ஸ்தம்பிதமடைந்தது.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று தலவாக்கலை பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த மக்கள் கடும் அசௌகரியங்களுக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
பல்வேறு நோய்களுக்கு மிக தூர பகுதிகளிலிருந்து சிகிச்சை பெற வந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். இது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதேவேளை தலவாக்கலை பிரதேச பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒரு சில மாணவர்கள் திரும்பிச்சென்றதையும் காணமுடிந்தது.