தாயும் மகனும் சேர்ந்து நடத்திய திருவிளையாடல்; கண்டு பிடித்த பொலிஸார்
வீட்டு வேலைகளுக்கான பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தயும், மகனும், வீடுகளில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டுகளுக்காக பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண், தனது மகன் தலைமையிலான கும்பலுடன் நீண்ட காலமாக வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில் , பெம்முல்ல பகுதியில் இறுதியாக நடத்திய கொள்ளை சம்பவத்தின் விசாரணையின் மூலம் இந்த மோசடி வெளிப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
நகைகள் மற்றும் ஹெரோயின் பறிமுதல்
நீர்கொழும்பில் அமைந்த வீட்டு வேலைகளுக்கான பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றிய இந்தப் பெண், அதன் மூலம் பெம்முல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டார்.
பின்னர், இரவு நேரத்தில் தனது மகன் தலைமையிலான கும்பலுடன் குடியிருப்பாளர்களை கட்டிவைத்து, 1.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகளை குறித்த பெண் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஹங்குரான்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்த இந்தத் தாயும் மகனும் உள்ளிட்ட கும்பல், 24 மணி நேரத்திற்குள் பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் 3 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல் நாடு முழுவதும் சுமார் 10 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பெண்ணின் மகன், பிக்கு ஒருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.