சிறையில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு மாதாந்த ஓய்வூதியம்; நளினுக்கு இல்லை
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவார் எனக் கூறப்படுகிறது.
அதன்படி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய மஹிந்தானந்த அளுத்கமகே மாதாந்தம் 36,000 ரூபாவை மாதாந்த ஒய்வூதியமாகப் பெறுவார் என கூறப்படுகின்றது.
நளின் பெர்னாண்டோவுக்கு ஓய்வூதியம் கிடைக்காது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து எதுவும் குறிப்பிடப்படாத நிலையில் , அவர் தனது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற வேண்டியிருக்கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தீர்ப்பில் ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டால், அது நிறுத்தப்பட வேண்டும், ஆனால் இதுவரை அப்படி ஒரு விடயம் குறித்து எந்த அறிக்கையும் இல்லை.
அதேவேளை கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு, அவரது நாடாளுமன்ற சேவை காலம் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பதால், ஓய்வூதியம் கிடைக்காது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.