முல்லைத்தீவு மக்களிடம் அபகரிக்கப்பட்ட பணம்; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முல்லைத்தீவு - விசுவமடு கிழக்கு பகுதியில் இன்றைய தினம் இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும் உங்களது கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு அதிகளவிலான வேலைப்பழு காணப்படுவதால் சமுர்த்தி உத்தியோகத்தரின் கட்டளைக்கமைவாகவே தான் இப்பகுதியில் மக்களின் காசுகளை பெற்று வருவதாக தெரிவித்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி உத்தியோகத்தரிடம் கதைத்துவிட்டு சொல்கிறேன் என தொலைபேசியில் உரையாடுவது போல் பாசாங்கு செய்துள்ளனர்.
அபகரிக்கப்பட்ட பணம்
மீண்டும் அவரிடம் வந்து " அம்மா சரி உங்களிடம் இருக்கின்ற 5000 ரூபாய் பணத்தை தாருங்கள் மிகுதி பணத்தை சமுர்தியில் எடுத்து நாளை தந்தால் மாத்திரமே உங்களது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்த முதியவரும் சரி நாளைய தினம் உங்களது பணத்தை பெற்று தருவதாக தெரிவித்து 5000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்."
இது போன்று இவர்கள் பலரிடம் பணம் வசூலித்துசென்று உள்ளனர்.
பதிலளித்த சமுர்த்தி உத்தியோகத்தர்
இது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகிரிடம் வினவிய போது, இது குறித்து தமக்கு எந்தவித தகவலும் தெரியாது எனவும், இது தொடர்பாக தமக்கு எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.