பூமிக்கு திரும்பியவுடன் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்; சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்
9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதத்தில் ,
எங்கள் இதயத்துக்கு நெருக்கமாகவே இருக்கிறீர்கள்
"இந்திய மக்களின் சார்பாக, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, புகழ்பெற்ற விண்வெளி வீரர் மைக் மாசிமினோவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அப்போது, உங்களைப் பற்றியும், உங்கள் சாதனைகளைப் பற்றியும் பேசினோம். எங்கள் உரையாடலின் தொடர்ச்சியாக, உங்களுக்கே நேரடியாக கடிதம் எழுதுகிறேன். நான் அமெரிக்காவுக்கு வந்தபோது, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடனுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளால் பெருமைப்படுகின்றனர். நீங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயத்துக்கு நெருக்கமாகவே இருக்கிறீர்கள்.
உங்கள் பாதுகாப்பிற்கும் வெற்றிக்காகவும், இந்திய மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பூமிக்கு திரும்பியவுடன், இந்தியாவில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.
இந்தியா, தனது புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்கத் தயாராக உள்ளது. நீங்களும், வில்மோரும் பாதுகாப்பாக பத்திரமாக திரும்புங்கள் என மனமார்ந்த வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.