அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்; பிரதேச சபை தவிசாளர் உட்பட நால்வர் அதிரடியாக கைது
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் நீர்த்திட்டத்திறகு பொறுப்பான பொறியியலாளரினால் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி தெரனியகலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நீர்த்திட்டத்திற்கு தேவையான 477 நீர்மானி கருவிகள் உட்பட மேலும் சில உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்திருந்த மேலதிக விசாரணைகளை தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 98 நீர்மானிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் அவிஸாவலை நீதவானிடம் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர.
இதேவேளை குறித்த மோசடி விவகாரம் தொடர்பில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.