வவுனியா பேருந்தில் தாலிக்கொடியுடன் தவறவிடப்பட்ட கைப்பை; சாரதி என்ன செய்தார் தெரியுமா?
வவுனியா பேருந்தி தவறவிடப்பட்ட தாலிக்கொடி உட்பட வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட கைப்பை ஒன்று தொலைத்த நபரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தனியார் உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் வைத்து பேருந்து சங்கத்தின் தலைவர் சு.இராஜேஸ்வரினால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
நேற்றையதினம் வவுனியா மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட ND- 7038 இலக்கமுடைய பேருந்தில் பயணம் மேற்கொண்ட கிளிநொச்சி நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் இறங்கும்போது தவறுதலாக தனது கைப்பை ஒன்றினை பேருந்தில் தவறவிட்டு இறங்கியுள்ளார்.
அதனை பார்வையிட்ட தனியார் பேருந்தின் சாரதியும், உரிமையாளருமான கே.ஜீவானந்தபவனினால் குறித்த கைப்பை வவுனியா மாவட்ட பேருந்து சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது.
.இதனையடுத்து கைப்பையில் காணப்பட்ட அடையாள அட்டை ஆவணத்தின் முகவரிக்கு குறித்த உரிமையாளருடன் தொடர்புகொண்டு அவர் பேருந்தில் தவறவிட்ட ஐந்து பவுண் தாலிக்கொடி மற்றும் மூன்று வங்கி புத்தகம் என்பவற்றை உரிமையாளரூடாக உறுதிப்படுத்திய பின்னர் இன்றையதினம் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அலுவலகத்தில் வைத்து தலைவரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் தவறவிட்ட தங்க நகை உட்பட ஆவணங்கள் திரும்ப ஒப்படைத்த பேருந்து சாரதியின் நேர்மையான சம்பவத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.