பிக்பொஸ் யாழ்ப்பாண ஜனனிக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் புகழாரம்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 'பிக்பொஸ்' புகழ் நடிகை ஜனனியை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் நேற்றைய தினம் (1) காலை தனது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
அதோடு இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியிலும் சந்தித்து கலந்துரையாடினார்.

சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிரவேண்டும்
இதன்போது அமைச்சர், எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிரவேண்டும் என தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர்,
பிக்பாஸ் ஜனனி, நடிகை ஜனனி, அறிவிப்பாளர் ஜனனி என எவ்வாறான பாதைகளில் இருந்தாலும், அவர் எம்முடைய சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார் என்ற உணர்வை எமது சந்திப்பு மேலும் உறுதிப்படுத்தியது.
எங்களின் அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அன்று பிக்பொஸ் நிகழ்ச்சியில் அறியப்பட்ட ஜனனியை விட, இன்று தனது திறமைகள், சுயநம்பிக்கை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கலைஞராக அவர் வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது.
அவ்வாறான ஆளுமைமிக்க ஜனனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக அவர் விளங்கவேண்டும் என வாழ்த்துகிறேன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.