இந்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சரை சந்தித்த இலங்கை முக்கியஸ்தர்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட (Milinda Moragoda), இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியை (Hardeep Singh Puri) புதுடெல்லியில் உள்ள நகர விவகார அமைச்சில் சந்தித்துள்ளார்.
மேலும் இந்த தகவலை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கும் மேலதிகமாக, கடந்த ஆண்டு ரிசம்பரில் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) இந்திய விஜயத்தின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புக்கான நான்கு தூண்களின் கீழ் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் பூரிக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பெற்றோலியப் பங்குகளை மேம்படுத்துவதற்கு இந்தியாவினால் மேலதிக உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் நாட்டின் எரிசக்தித் துறையில் அவற்றின் தாக்கம் தொடர்பாக இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமைச்சர் பூரிக்கு உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இந்தியாவும் இலங்கையும் பெற்றோலியத் துறையில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து உயர்ஸ்தானிகரும் அமைச்சரும் கலந்துரையாடினர்.
பெட்ரோலியம், எண்ணெய், எரிவாயு மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறைகளில் இலங்கை நீண்டகால மூலோபாய உறவுகளை ஏற்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் உட்பட எரிசக்தித் துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரசியலில் இணைவதற்கு முன்னர் ஒரு புகழ்பெற்ற தொழில் தூதுவராக விளங்கினார். அவர் 1984 – 1988 காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார்.