ஜேர்மன் யுவதி மீது பாலியல் துன்புறுத்தல்; வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் மிஹிந்தலை புனித பூமியில், சுற்றுலாப் பயணியான இளம் ஜெர்மன் யுவதி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் நேற்று (16) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்த 24 வயதுடைய ஜெர்மன் யுவதி, இன்று காலை மிஹிந்தலை விகாரையின் அழகையும் தொல்பொருள் சிதைவுகளையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

யுவதியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயற்சி
இதன்போது, அங்கு கடமையில் இருந்த தொல்பொருள் திணைக்கள ஊழியர் ஒருவர், அந்தப் பெண்ணுக்கு வழிகாட்டுவது போல நடித்து, ஆள் நடமாட்டம் குறைந்த 'மிஹிந்து குகை' பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தனிமையில் இருந்த யுவதியை ஊழியர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயற்சித்துள்ளார். எனினும், சுதாரித்துக் கொண்ட அந்த வெளிநாட்டு யுவதி, உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் சென்று மிஹிந்தலை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாடு கிடைத்த சில மணிநேரங்களிலேயே அதிரடியாகச் செயற்பட்ட மிஹிந்தலை பொலிஸார், 41 வயதுடைய அந்தச் சந்தேக நபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். கைதான நபர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்நிலையில் மிஹிந்தலை புனித பூமியில் நடந்த இந்தச் செயல் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!