சுவிஸில் நள்ளிரவில் நடந்த துயர சம்பவம்: இரு சிறார்களுக்கு நேர்ந்த சோகம்
சுவிஸில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த குடியிருப்பில் சிக்கி, சிறார்கள் இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பெர்ன் மாநிலத்தின் Leuzigen பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் அவசர உதவிக்குழுவினர் கரும்புகை சூழ்ந்து தீப்பற்றியெரியும் குடியிருப்பை கண்டுள்ளனர்.
தீவிபத்தில் இருந்து குழந்தை ஒன்றுடன் பெரியவர்கள் இருவர் தப்பியது தெரிய வந்தது. இதேவேளை இன்னொரு சிறுவரும் அந்த குடியிருப்பில் இருந்து தாமாகவே வெளியேறியுள்ளார்.
தீ விபத்தில் இருந்து தப்பிய நால்வரும் லேசான காயங்களுடன் அருகாமையில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், குடியிருப்பின் உள்ளே இருந்து சிறார்கள் இருவரை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.
சிறார்கள் இருவரையும் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்தும் அவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பெர்ன் மாநில பொலிஸார் உயிரிழந்த சிறார்கள் இருவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் ஏதும் பகிரவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. சுமார் 80 தீயணைப்பு மற்றும் அவசர உதவிக்குழுவினரின் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 2.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பானது மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் வசிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் பெர்ன் மாநில பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.