தமது கல்வித்தகைமையை தெரிவிக்க மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித்தகைமையை தெரிவிக்க மறுத்துவருவதாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை தரவுகளை சேகரிக்கவும், அவர்களின் கல்வித்தகைமைகள் உள்ளடங்கலாக அவர்களின் தனிப்பட்ட கோப்புகளை பராமரிக்கவும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்வித்தகைமைகள் குறித்து நாடாளுமன்ற அலுவலகம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் 20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமை வழங்கப்படாது மறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கு அதிக காலமாக இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள், அவர்களின் அடிப்படை தகவல்கள், அவர்களை தொடர்புகொள்ளும் இலக்கங்கள், முகவரிகள் என்பவற்றை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரிடமும் கோரியிருந்த போதிலும் 80 வீதமான பாராளுமன்ற உறுப்பினர் தமது கல்வித்தகைமைகள் மற்றும் ஏனைய அடிப்படை காரணிகளை நாடாளுமன்ற அலுவலகத்திற்கு வழங்கியுள்ளனர்.
எனினும் 20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் அவற்றை வழங்காதுள்ளதாகவும், சிலரிடம் வினவினாலும் அவர்கள் பல்வேறு காரணிகளை கூறி தகவல் வழங்குவதில் இருந்து நழுவிச்செல்வதாகவும் நாடாளுமன்ற அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
எது எவ்வாறு இருப்பினும் இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அடிப்படை தகுதி இருக்க வேண்டும்.
அதேபோல் அவர்கள் வழங்கும் தகவல்களில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என கருதுவதாகவும், இவ்வாறு தகவல் வழங்க மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொடுக்க சபாநாயகரை வலியுறுத்தவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.