அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்! மஹிந்த வழங்கிய ஆலோசனை
வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆலோனை வழங்கியுள்ளார்.
இன்று (04-01-2022) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில்நடைபெற்ற கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுவரை காணப்பட்ட செயல்முறையை சில அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற முயற்சிப்பதன் ஊடாக நெருக்கடிகள் ஏற்படும் என சுட்டிக்காட்டிய பிரதமர், அரசியல் நோக்கில் சென்று அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தாது தொழிற்சங்கங்களுடன் நிறுவன சட்டவிதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு சுகாதார அமைச்சிக் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வைத்திய நிர்வாகத்தை சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட என இரு பிரிவுகளாக பிரித்து செயற்படுத்தாது ஒரே அடிப்படையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய இதன்போது முன்மொழிவொன்றை முன்வைத்தார்.
மேலும் இந்த கலந்துரையாடலில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமரின் செயலாளர் காமினி எஸ் செனரத், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.எச்.முணசிங்க, தேசிய சம்பள ஆணைக்குழுவின் செயலாளர் சந்திரானி சேனாரத்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணரத்ன,
அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சந்தன குமாரசிங்க, பிரதமரின் சிரேஷ்ட உதவி செயலாளர் பிரியங்க நாணயக்கார, பிரதமரின் உதவி செயலாளர் பாத்திமா ஃபர்சானா, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.