மாத்தறை துப்பாக்கிச்சூடு; கொலைக்கு ஒப்பந்தம் வழங்கிய மனைவி
மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூவரில் குறித்த கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகக் கூறப்படும் நபரின் மனைவியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் கந்தர மற்றும் தேவேந்திரமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்
சம்பவத்திற்கு முன்னதாக தெஹிகெதர ரங்க என்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் குறித்த இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இந்த நிலையில் தெஹிகெதர ரங்க என்ற சந்தேக நபர் கொலைக்கான திட்டத்தை வகுத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்த நபர் இதற்கு முன்னதாக ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றைய நபர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் ஏதேனும் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.