23 வயது யுவதிக்கு 7 மாதங்களில் 25 பேருடன் திருமணம் ; பொறிவைத்துப் பிடித்த பொலிஸ்!
திருமணத்தின் பெயரில் ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற 23 வயதான இளம்பெண், கடந்த 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, அனுராதா (Anuradha Paswan), சமூக வலைதளங்கள் மற்றும் திருமண தரகர்கள் வழியாக தனது வலையை விரித்துள்ளார்.
திருமணத்திற்காக விருப்பமுடன் பெண்களை தேடும் ஆண்களை குறிவைத்து, அவர்களுடன் சட்டப்படி பதிவு திருமணம் செய்து, சில நாட்களில் நகை, பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு அனுராதா (Anuradha Paswan), மாயமாகி வந்துள்ளார்.
26 ஆவது மணமகனான பொலிஸ்
சம்பவம் தொடர்பில் சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் புகார் அளித்ததை தொடர்ந்து, அனுராதாவின் நடமாட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
அனுராதாவை சிக்க வைக்க போபாலில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை வருங்கால மாப்பிள்ளையாக காட்டி, 26வது திருமணம் செய்ய முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
கைதான பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனுராதா ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மோசடி செய்துள்ளதாக தெரியவந்தது.
மணமகளாக நடித்து, நம்பிக்கையுடன் வீட்டுக்குள் நுழைந்து, சில நாட்களில் கொள்ளை அடித்து ஓடுவதை அனுராதா வழக்கமாக்கி கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.