ஜேவிபி அணியிடம் கேள்வி எழுப்பிய மனோ!
மக்கள் விடுதலை முன்னணிக்கு சிறுபான்மையினருடன் இணைந்து செயற்பட விருப்பமில்லையா என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (29) சனிக்கிழமை கொழும்பில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் கருத்தாடல் இடம்பெற்றபோது மனோ கணேசன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வுக்கு ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Dissanayaka) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அவர்கள் வராத நிலையிலேயே மனோ கணேசனினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் நிறைவேற்று அதிகாரம் உள்ளது. அது 20வது திருத்தத்தின் ஊடாக வலுப்பெற்றுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத்தில் சிறுபான்மை கட்சிகளின், சிறுக்கட்சிகளின் கருத்துக்கள் பிரதிபலிக்க வேண்டும். இது இல்லாதபோது ஏகாதிபத்தியவாதம் தலைதூக்கும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கு பொறுப்புக்கூற கூடியவராக இல்லாமல், நாட்டுக்கு பொறுப்புக்கூறக்கூடியவராக இருக்க வேண்டும். தேர்தலில் விருப்புத்தெரிவு என்பது அவசியமானது. இதன்போதே மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.