மன்னார் சிந்துஜா உயிரிழப்புக்கு காரணமான வைத்தியர் பணி இடைநீக்கம்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா மரணத்துடன் தொடர்புடைய வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.
கடந்த மாதம் 28ஆம் திகதி, 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண் அதிக குருதி போக்கு காரணமாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்
அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர் அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
சுகயீன விடுமுறையில் சென்ற வைத்தியர்
குறித்த வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ள நிலையில் வைத்தியருக்கான பணியிடை நீக்கம் தொடர்பாக கடிதம் நேற்றைய தினம் (21) தனக்கு கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளமையினால் அவருக்கான பணியிடை நீக்கம் தொடர்பான கடிதம் அவரிடம் சமர்ப்பிக்கவில்லை.
குறித்த கடிதம் அவருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, இதன் பிரதி பதிவுத் தபால் மூலம் குறித்த வைத்தியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தெரிவித்தார்.